புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியினர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்
- நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
- செல்போன் டவரில் ஏறியிருந்தவர்களையும் கீழே இறங்க செய்தனர்.
புதுச்சேரி:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆத் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரும், டெல்லி மாநில முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஜ்ரிவால் கைதுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதேபோல் புதுச்சேரி மாநில ஆம் ஆத்மி கட்சி சார்பில் காமராஜர் சாலையில் போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஆலடி கணேசன் தலைமையில் பிருந்தாவனத்தில் உள்ள தனியார் கட்டிடத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி 3 பேர் நின்று கோஷம் எழுப்பினர். அதேநேரத்தில் செல்போன் டவரின் கீழே சாலையில் ஆம் ஆத்மி கட்சியினர் தரையில் படுத்து, கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். செல்போன் டவரில் ஏறியிருந்தவர்களையும் கீழே இறங்க செய்தனர். இதனால் காமராஜர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.