மாநில வளர்ச்சியை முடக்கும் அதிகாரிகளை எதிர்த்து தீர்மானம்-எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முன்னெடுக்கும் கொள்கை திட்டங்களை நிறைவேற்றும் நிர்வாக அமைப்பாக தலைமை செயலகம் இருக்க வேண்டும்.
- செயல்படாத அதிகாரிகள் மீது சபையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரின் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீது எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முன்னெடுக்கும் கொள்கை திட்டங்களை நிறைவேற்றும் நிர்வாக அமைப்பாக தலைமை செயலகம் இருக்க வேண்டும்.
ஆனால், கவர்னருடன் இணைந்து அமைச்சரவை முடிவுக்கும், திட்டங்களுக்கும் முரணாகவே தலைமை செயலகம் செயல்பட்டு வருவது அன்றாட சட்டமன்ற நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது. தலைமைச் செயலரும், ஐ.ஏ.எஸ். செயலாளர்களும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.
நிதிச் செயலர் தன்னுடைய அதிகாரத்தை காட்ட மாநில வளரச்சியை முடக்கிப் போடுகிறார். செயல்படாத அதிகாரிகள் மீது சபையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களுக்கு நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை அரசு மறந்துவிட்டது. உள்ளாட்சி ஊழியர்களுக்கு நேரிடையாக அரசு சம்பளம் வழங்க வேண்டும். நில அளவைத் துறை மற்றும் நகரக் குழுமம் மிகப் பெரி செல்வந்தர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
போலி பத்திரப் பதிவுகள் அதிகரித்துள்ளன. இதனை வரன்முறைப்படுத்த வேண்டும். போலிப் பத்திரப் பதிவு சார்பதிவாளருக்கு தெரியாமல் நடக்காது. அதுபோன்று நடக்கும் போது ஏதாவது ஒரு சார்பதிவாளர் மீது அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் போலியாக பத்திரப் பதிவு செய்வோர் அஞ்சி இருப்பார்கள்.
இவ்வாறு சிவா பேசினார்.