புதுச்சேரி-திண்டிவனம் புதிய ரெயில் பாதை ஆய்வு பணி 2 மாதங்களில் முடிவடையும்: தெற்கு ரெயில்வே மேலாளர் தகவல்
- சென்னையிலிருந்து இயக்கப்படும் ரெயில்கள் திண்டிவனம், வில்லியனூர், கடலூர் வழியாகச் செல்லும் நிலை ஏற்படும்.
- ஆய்வுக்குப் பிறகு ரெயில்வே அமைச்சகத்திடம் திட்டத்தை விளக்கி செயல்படுத்தப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், அவர்கள் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினர். அப்போது, புதுச்சேரி-கடலூர் ரெயில் பாதைத் திட்டம் குறித்து முதலமைச்சரிடம் ரெயில்வே அதிகாரிகள் விளக்கினர்.
பின்னர் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி ரெயில் நிலையத்தை அவர். ரூ.72 கோடியில் நவீனப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் 2 ½ ஆண்டுகளில் நிறைவடையும்.
புதுச்சேரி-திண்டிவனம்-கடலூர் இடையேயான ரெயில் பாதைத் திட்டத்தில் புதுச்சேரி ரெயில் நிலைய அமைவிடத்தால் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
எனவே, சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக ரெயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது.
புதுச்சேரி-திண்டிவனத்தை இணைக்கும் ரெயில் திட்டத்தில்புதுச்சேரி நகருக்குள் ரெயில் பாதை வராமல், வில்லியனூர். வழியாக கடலூருக்குச் செல்லும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, சென்னை யிலிருந்து இயக்கப்படும் ரெயில்கள் திண்டிவனம், வில்லியனூர், கடலூர் வழியாகச் செல்லும் நிலை ஏற்படும். அதற்கான ஆய்வுப் பணிகள் 2 மாதங்களில் நிறைவுபெறும்.
இந்தத் திட்டம் குறித்து புதுவை முதல்-அமைச்சரிடம் விளக்கி, அதற்கான வரைபடத்தையும் காட்டியுள்ளோம். ஆய்வுக்குப் பிறகு ரெயில்வே அமைச்சகத்திடம் திட்டத்தை விளக்கி செயல்படுத்தப்படும்.
காரைக்கால்-பேரளம் புதிய ரெயில் பாதைத் திட்டம் குறித்தும் முதலமைச்சரிடம் விளக்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.