கோப்பு படம்.
தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் பணிநிரந்தரம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
- கொரோனா தடுப்பு பணிக்கு கடந்த 9.9.2020ல் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர், ஏ.என்.எம். ஆகியோர் ஒப்பந்த அடிப்படையிலேயே பணி செய்து வருவதை அரசு அறியுமா?
- நீண்டகாலமாக தேசிய ஊரக சுகாதார இயக்கத்தில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-
பிரகாஷ்குமார்(சுயே): கொரோனா தடுப்பு பணிக்கு கடந்த 9.9.2020ல் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர், ஏ.என்.எம். ஆகியோர் ஒப்பந்த அடிப்படையிலேயே பணி செய்து வருவதை அரசு அறியுமா? அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?
முதல்-அமைச்சர் ரங்கசாமி: அவர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. அவர்களை 3 முறை ஒப்பந்தம் நீட்டித்துள்ளோம். வாய்ப்பிருந்தால் பணி நிரந்தரம் பற்றி ஆலோசிக்கலாம்.
அப்போது எதிர்கட்சித்தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் நேரு, கல்யாணசுந்தரம், நாஜிம், வைத்தியநாதன், நாக.தியாகராஜன், ஜான்குமார், ரிச்சர்டு, ரமேஷ், ஆகியோர் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், சுகாதாரத்துறையில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாடு, ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஆஷா பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி: நீண்டகாலமாக தேசிய ஊரக சுகாதார இயக்ககத்தில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் உள்ளனர். சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களில் சுகாதார இயக்கக ஊழியர்களை நிரப்ப உள்ளோம். அதன்பிறகு படிப்படியாக மற்றவர்களுக்கு வாய்ப்புக்கேற்ப பணி அளிக்கப்படும்.
எதிர்கட்சித்தலைவர் சிவா: மல்லாடிகிருஷ்ணாராவ் அமைச்சராக இருந்தபோது வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என ஏஎன்எம்களை பணிக்கு எடுத்தனர். தற்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிகராக சாலைதோறும் சென்று பணிகளை செய்கின்றனர். அவர்கள் முழுநேரமும் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 சம்பளம் வழங்கப்படுகிறது. இதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கொடுங்கள். முதல்-அமைச்சர் இதை மனசாட்சியோடு அணுக வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.