சூலா அடுப்புகளை முனுசாமி தலைமையில் தயாரிக்கும் காட்சி.
நாப்கின் எரிக்கும் சூலா அடுப்புகள்
- 34 ஆயிரம் பெண்களுக்கு வழங்க திட்டம் நடைபெறும்.
- குப்பை கிடங்குகளில் கொட்டப்படுவதாக சுற்றுச்சூழல் குழு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களை அழிப்பது அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12.3 மில்லியன் பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின் பேடுகள் குப்பை கிடங்குகளில் கொட்டப்படுவதாக சுற்றுச்சூழல் குழு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆர்கானிக் இல்லாத சானிட்டரி பேடுகள் ஒவ்வொன்றும் நான்கு பிளாஸ்டிக் பைகளுக்கு சமம். அது மக்கி அழிவதற்கு பல ஆயிரம் ஆண்டாகும்.
இதனால் பூமியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அபாயமாக மாறி வருகின்றன. நாப்கின் பேடுகளை அழிக்க மத்திய அரசு பல மாநிலங்களில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. புதுவையில் நாப்கின்களை பயன்படுத்தும் பெண்கள் அதனை குப்பையில் கொட்டாமல் தங்கள் வீடுகளிலேயே எரித்து அழிப்பதற்கு புகை ஏற்படுத்தாத சூலா மண் அடுப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நலிந்த மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 34 ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக அடுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு அடி அகலம் ஒன்றரை அடி உயரம் கொண்ட களிமண் மூடியுடன் கூடிய இந்த மண் அடுப்பில் நாப்கினை போட்டு கொளுத்தினால் எவ்வித புகையும் ஏற்படாமல் சாம்பலாகிவிடும் சாம்பலை கீழ்ப்புறமாக எடுத்து வெளியே கொட்டி விடலாம்.
இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த அடுப்புகளை தயாரிக்கும் பணியில் டெரகோட்டா கைவினை கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி குழுவினர் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து முனுசாமி கூறும்போது:-
அரசின் மூலம் பெண்களுக்கு நாப்கின் எரிக்கும் களிமண்ணால் தயார் செய்து கொடுக்கும் சூலா அடுப்பு திட்டம் வரவேற்கத்தக்கது. இதை பெண்களுக்கு செய்து கொடுப்பது பெருமிதமாக உள்ளதாக தெரிவித்தார்.