தவறாமல் வாக்களிக்க கோரி 50 ஆயிரம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம்
- பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பொம்மலாட்ட காணொலிகள், உயர்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, நகர பகுதியில் இயங்கும் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பாராளுமன்ற தேர்தலில் தவறாது ஓட்டளிக்க வேண்டி, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தனிப்பட்ட கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், தனது பெயரில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தனிப்பட்ட வேண்டுகோள் கடிதங்களை, நகர பகுதிகளில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கி, அதனை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூலம் அவர்களது பெற்றோர்களிடம் தவறாது சேர்த்திட கேட்டுக்கொண்டார். அதன்படி, 50 ஆயிரம் பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பொம்மலாட்ட காணொலிகள், உயர்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்த காணொலிகளை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாக்காளர் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.