வட மாநில வாலிபரை கடத்தி பணம்-செல்போன் பறிப்பு
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து தாக்கி கடத்தி சென்றனர்.
- செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.
புதுச்சேரி:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன் மாலிக் (வயது 26). இவர் அரியாங்குப்பம் பகுதியில் தங்கி அங்குள்ள டைல்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 18-ந் தேதி புதுவை கடலூர் சாலையில் வேலை முடித்துவிட்டு நடந்து வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து தாக்கி கடத்தி சென்றனர்.
மணவெளி சாராயக்கடை யில் அருகே உள்ள பகுதியில் அழைத்துச் சென்ற அவர்கள் அங்கு 17 வயது கொண்ட 2 சிறுவர்களும் சேர்ந்து மாலிக்கை தாக்கி அவரிடம் இருந்து பணம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.
படுகாயம் அடைந்த மாலிக் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது உள்ளூர் வாலிபர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்த தீபக் (வயது 20), வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மாதேஷ் (20) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.