பிரமோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி.
மூலநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
- 1-ந்தேதி தேரோட்டம்
- முருகன் வள்ளி தெய்வானை தெப்பல் உற்சவமும், 3-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது.
புதுச்சேரி:
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வேதாம்பிகை சமேத மூலநாதர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
இதுபோல் இந்த ஆண்டு 10 நாள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, 6 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 4 மணிக்கு பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பிறகு காலை 6 மணிக்கு கொடி மரத்திற்கு கலச அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் விமர்சையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ பாகூர் தாசில்தார் பிரித்விராஜ் மற்றும் சிவ பக்தர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பிரமோற்சவ விழாவில் தினமும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. இதனைத் தொடர்ந்து வருகிற 29-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், ஜூலை 1-ந் தேதி தேர் திருவிழா, 2-ந் தேதி முருகன் வள்ளி தெய்வானை தெப்பல் உற்சவமும், 3-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், அர்ச்சகர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.