புதுச்சேரி

பதட்டமான 232 வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிப்பு

Published On 2024-03-29 04:25 GMT   |   Update On 2024-03-29 04:25 GMT
  • புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.
  • அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தலுக்கு மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது.

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலுக்காக மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை தேர்தல் துறை இறுதி செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருந்தது.

இந்த 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்று இறுதி செய்துள்ளது. இதன்படி புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் புதுவை 739, மாகி 31,ஏனாம் 22, காரைக்காலில் 163 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

சில வாக்குச்சாவடிகளை இணைத்து ஒரே இடத்தில் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 967 வாக்குச் சாவடிகளும் 618 இடங்களில் அமைந்துள்ளன.

நகர பகுதியை பொருத்தவரை 534 வாக்குச்சாவடிகள் 344 இடங்களில் அமைந்துள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தவரை 427 வாக்குச்சாவடிகள் 274 இடங் களில் அமைந்துள்ளன. புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.

அதில் புதுவையில் 180ம், காரைக்காலில் 35-ம் உள்ளன. மாகியில்7, ஏனாமில் 10 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்த தேர்தல்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக தேர்தல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்படி புதுச்சேரி 3, ஏனாமில் 7 வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக கண்காணிக்கப்பட்ட உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News