மத்திய அரசு திட்டங்களுக்கு 100 சதவீத மானியம் வேண்டும்-முன்னாள் எம்.பி ராமதாஸ் வலியுறுத்தல்
- வெளிச்சந்தை கடன் வட்டியை கட்ட நிதியுதவி வழங்க வேண்டும். வீண்செலவுகளை தவிர்க்க புதுவை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
- புதுவையின் வருவாய் மற்றும் செலவுக்கு இடையிலான இடைவெளி பெருகி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வரும் நிதி மந்திரியை வரவேற்கிறேன். அவரின் வருகை புதுவை நிதி பிரச்சினைகளை தீர்த்து ஒரு சுமூகமான நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன். புதுவையின் வருவாய் மற்றும் செலவுக்கு இடையிலான இடைவெளி பெருகி வருகிறது.
பெரும் நிதி நெருக்கடியில் புதுவை சிக்கியுள்ளது. இந்த நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு புதுவையை மாநிலமாக தரம் உயர்த்துவதுதான். இப்போது அது சாத்தியப்படக்கூடியது அல்ல. மாற்றாக நிதி மந்திரி புதுவையை நிதிக்குழுவின் வரம்பில் கொண்டவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் யூனியன் பிரதேச வருவாயில் குறைந்தபட்சம் 30 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.
மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களை 100 சதவீத நிதியோடு செலவு செய்ய முன்வர வேண்டும். புதுவை மாநில கடன் தொகை ரூ.11 ஆயிரத்து 556 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும். வெளிச்சந்தை கடன் வட்டியை கட்ட நிதியுதவி வழங்க வேண்டும். வீண்செலவுகளை தவிர்க்க புதுவை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
நிதி பொறுப்பு, பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை உடனடியாக இயற்றும்படி சொல்ல வேண்டும். புதுவைக்கு உதவி செய்வதோடு பல நல்ல ஆலோசனைகளையும் மத்திய மந்திரி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.