வழிபாடு
நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்களை படத்தில் காணலாம்.

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

Published On 2022-03-23 11:26 IST   |   Update On 2022-03-23 11:26:00 IST
சிறுவர் முதல் முதியவர் வரையிலும், கைக்குழந்தைகளுடன் பெண்கள் உள்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோயிலுக்கு வந்து காப்பு கட்டி 15நாட்கள் விரதம் தொடங்கினர்.

அன்றிரவு அம்மன் குளத்தி லிருந்து கம்பம் நகர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து விழாவில் ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மாரியம்மன் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், மாறுவேடமணிந்து வருதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.

மேலும் மேளதாளம் முழங்க தாம்பூலத்தில் அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்க சென்றனர். முன்னதாக கோவில் முன்பாக கழுகு மரம் ஊன்றப்பட்டிருந்தது. பின்னர் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.

அதைதொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்க தொடங்கினர். முதலில் கோவில் பூசாரிகள் இறங்க அதனை தொடர்ந்து பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக இறங்கினர். இதில் சிறுவர் முதல் முதியவர் வரையிலும், கைக்குழந்தைகளுடன் பெண்கள் உள்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர்.

நேற்று இரவு கோயிலிலிருந்து கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இதில் சுமார் ஏராளமான பக்தர்கள் சுற்று வட்டாரங் களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

இன்று புதன் கிழமை காலையில் மாரியம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டது. இதில் நகரின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று இருப்பிடம் போய் சேர்ந்தது.

Similar News