செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம்

Published On 2021-08-02 13:59 IST   |   Update On 2021-08-02 13:59:00 IST
நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றம் நடந்த போதிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவியதால் பல மாதங்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டிருந்தது. வழக்கமான பூஜைகள் நடைபெற்ற போதிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கொரோனா 2-வது பரவல் சற்று குறைந்ததால் அருணாசலேஸ்வரர் கோவில் திறக்கப்பட்டு வந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதிலும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததால் திருவிழா நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் கூடாமல் தடுக்கும் வகையில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் கோவில் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் நேற்று (1-ந்தேதி) முதல் நாளை (3-ந்தேதி) வரை 3 நாட்கள் முக்கிய கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவும் திடீரென தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றம் நடந்த போதிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இன்று ஆடி கிருத்திகை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்தனர்.

அவர்கள் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வேதனை அடைந்த பக்தர்கள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் கிரிவலம் சென்று விட்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்தனர்.

திடீரென கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வெளியானதால் அதுபற்றி பொதுமக்கள் பலர் அறியாமல் வந்ததாக கூறினர்.

Similar News