உலகம்

அமெரிக்காவால் முடியும்போது பாகிஸ்தானால் முடியாதா?: இந்திய தூதர்

Published On 2025-05-21 03:07 IST   |   Update On 2025-05-21 03:07:00 IST
  • ஹபீஸ் சயீத் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர்.
  • பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

ஜெருசலம்:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளை மற்ற நாடுகள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகள் மக்களைக் கொல்கின்றனர். அவர்களை கொல்லும் முன் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என கேட்டுள்ளனர். அதன்பின்னரே கொன்றுள்ளனர். இதற்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது தற்காலிகமாக தான் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அது இன்னமும் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடரும். அவர்கள் எங்கிருந்தாலும் அழிப்போம்.

பயங்கரவாதிகள் தொடர்பு குறித்து நாங்கள் தொழில்நுட்ப ரீதியான உள்ளீடுகளை அளித்துள்ளோம். அமெரிக்கா ஆதாரங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் பயங்கரவாதிகள் சுற்றித் திரிகின்றனர்.

ராணாவை ஒப்படைக்க அமெரிக்காவால் முடியும்போது, பாகிஸ்தானால் ஏன் பயங்கரவாதிகளை (ஹபீஸ் சயீத், சாஜித் மிர், ஜாகிர் ரஹ்மான் லக்வி) ஒப்படைக்க முடியாது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்கவே முடியாது என பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார் என தெரிவித்தார்.

பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News