ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா முடிவு
- அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கும் என தெரிவித்தது.
- ரஷியா மீது அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தயாராக உள்ளது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது.
எண்ணையை இந்தியா வாங்குதன் மூலம் அந்த நிதியை உன்ரைன் போரில் ரஷிய அதிபர் புதின் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை கூறி இந்த கூடுதல் வரியை விதித்துள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில் முதலில் விதித்த 25 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் கடந்த மாத இறுதியில் கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பும் அமலுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கும் என தெரிவித்தது.
இந்தநிலையில் இந்தியா மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியதாவது:-
அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்கும் நாடுகளுக்கு மேலும் வரிகளை விதித்தால் ரஷிய பொருளாதாரம் சரிந்துவிடும். அதிபர் டிரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்சும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உச்சுலா வானுடன் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
உச்சுலா என்னையும் தொடர்பு கொண்டு ரஷியா மீது அழுத்தம் கொடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்தார். ரஷியா மீது அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
உக்ரைன் ராணுவம் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? ரஷிய பொருளாதாரம் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? என்ற போட்டிதான் இப்போது இருக்கிறது. அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மேலும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். குறிப்பாக ரஷிய கச்சா எண்ணை வாங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்க வேண்டும். அப்படி வரிகள் விதிக்கும்போது ரஷிய பொருளாதாரம் முற்றிலும் சரிந்துவிடும். அதுதான் ரஷிய அதிபர் புதினை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசென்டின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் இந்தியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் ரஷியாவிடம் இருந்து தற்போது இந்தியாவும், சீனாவும் தான் அதிகளவில் கச்சா எண்ணை வாங்கி வருகிறது.
ஒரு வேளை அமெரிக்கா மேலும் கூடுதல் வரி விதித்தால் அது இந்தியாவுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனுடான போர் தொடர்பாக அமெரிக்கா சமரச பேச்சு வார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது நேற்று ரஷியா நடத்திய கடும் வான்வழி தாக்குதல் அமெரிக்காவை மேலும் கோபப்படுத்தி உள்ளது. இதனால் ரஷியா மீது 2-ம் கட்டமாக பொருளாதார தடை தயாராக இருப்பதாக டிரம்ப் சூசகமாக தெரிவித்து இருக்கிறார். இது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.