உலகம்

(கோப்பு படம்)

கருக்கலைப்பை மீண்டும் அனுமதிக்கும் கீழ் நீதிமன்ற உத்தரவு நிறுத்தி வைப்பு - டெக்சாஸ் உச்சநீதிமன்றம் நடவடிக்கை

Published On 2022-07-02 16:41 GMT   |   Update On 2022-07-02 16:41 GMT
  • புளோரிடாவில், 15 வாரங்களுக்குப் பிந்தைய கருக்கலைப்புகளைத் தடைசெய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
  • டெக்சாஸில் உள்ள கிளினிக்குகள் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கியதாக தகவல்,

டெக்சாஸ்:

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை உறுதிப்படுத்திய 1973 ஆம் ஆண்டின் முக்கிய தீர்ப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்தது.

இது தொடர்பாக கடந்த 24ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமெரிக்கா மாகாணங்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவின் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல், 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.

இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு டெக்சாஸ் அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த தீர்ப்பு வந்த சில நாட்களுக்கு பின்பு டெக்சாஸில் உள்ள கிளினிக்குகள் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. புளோரிடாவில், 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்புகளைத் தடைசெய்யும் சட்டம் வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வந்தது,

எனினும் அந்த மாகாண ஒரு நீதிபதி, இந்த தீர்ப்பு மாநில அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி அடுத்த வாரம் சட்டத்தை தற்காலிகமாகத் தடுக்கும் உத்தரவில் கையெழுத்திடுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கர்ப்பமாகி ஆறு வாரங்கள் வரை கருக்கலைப்புகளை தற்காலிகமாக மீண்டும் தொடங்கலாம் என்று கடந்த செவ்வாயன்று ஹூஸ்டன் நீதிமன்ற நீதிபதி, அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கும் உத்தரவை டெக்சாஸ் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த மாத இறுதியில் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News