இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா? முன்கூட்டியே கையெழுத்திட்டதாக தகவல்
- ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று போராட்ட பிரதிநிதிகள் கெடுவிதித்திருந்தனர்.
- ஜூலை 13-ம் தேதி குறிப்பிட்டு கோத்தபய ராஜபக்சே கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மார்ச் மாதம் முதல் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினார்கள்.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே கடிதம் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு அனுப்பி வைத்தார். அதில் அவர், "ஏற்கனவே அறிவித்த படி ஜூலை 13-ந்தேதி பதவியில் இருந்து விலகுவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய ராஜபக்சே மீண்டும் மீண்டும் கூறினாலும் கொழும்பில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். 13-ந்தேதி வரை நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று போராட்ட பிரதிநிதிகள் கெடுவிதித்திருந்தனர்.
இந்நிலையில், பதவி விலகல் கடிதத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜூலை 13-ம் தேதி குறிப்பிட்டு கோத்தபய ராஜபக்சே கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.