உலகம்

"நான் அதிபர் என்றால்..." - டிரம்ப் மீதான வழக்குகள் குறித்து நிக்கி திட்டவட்டம்

Published On 2024-01-01 07:46 GMT   |   Update On 2024-01-01 07:46 GMT
  • மீண்டும் அதிபராக விரும்பி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் டிரம்ப்
  • மன்னிப்பதுதான் நாட்டு நலனுக்கு உகந்த முடிவு என்றார் நிக்கி ஹாலே

அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருடம் நடைபெற உள்ளது.

ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்காவின் புளோரிடா, நியூயார்க் மற்றும் ஜியார்ஜியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

2020ல் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியான போது அவற்றை மாற்ற முயற்சித்தது, ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது, ஆபாச பட நடிகை ஒருவருக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கியது உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் ஐ.நா.விற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், ஒரு பேட்டியில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசிய நிக்கி ஹாலே, "நான் அதிபரானால் டொனால்ட் டிரம்பிற்கு மன்னிப்பு வழங்கி விடுவேன். அதுதான் நாட்டு நலனுக்கு உகந்த செயல். 80 வயது மனிதரை சிறையில் வைத்து அதன் மூலம் நாட்டை பிளவடைய விட மாட்டேன். அவரை மன்னிப்பதன் மூலம் அவரை குறித்த பேச்சுக்களையே தொடராமல் செய்து விடுவேன்" என கருத்து தெரிவித்தார்.

நிக்கியின் இந்த கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

சில தினங்களுக்கு முன் இதே கருத்தை மற்றொரு போட்டியாளரான விவேக் ராமசாமியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News