உலகம்

தனியார் விண்வெளி பயணம் வெற்றி: சாதித்துக் காட்டிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

Published On 2024-09-16 03:01 IST   |   Update On 2024-09-16 03:01:00 IST
  • ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடா விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி புறப்பட்டுச் சென்றனர்.
  • விண்வெளி பயணம் வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.

வாஷிங்டன்:

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும், பிரபல தொழிலதிபர் ஜேரட் ஐசக்மேனும் இணைந்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் போலரிஸ் டான் எனப்படும் தனியார் விண்வெளி பயண திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.

இத்திட்டத்தின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

டிராகன் விண்கலம் புறப்பட்ட 15 மணி நேரத்தில் சுமார் 1,400 கி.மீ. உயரத்திற்குச் சென்று, 50 ஆண்டுகால விண்வெளி பயண வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.

டிராகன் விண்கலத்தில் இருந்து ஜேரட் ஐசக்மேன் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர் சாரா கில்லி ஆகியோர் வெளியேறி வந்து ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையை மேற்கொண்டனர். அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள கவச உடைகள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறதா என்பதை அவர்கள் பரிசோதனை செய்தனர்.

இந்தப் பயணத்தின்போது 30 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பியது.

புளோரிடா கடற்கரை அருகே அந்த விண்கலம் பாராசூட் மூலம் கடலில் விழுந்தது. அதில் இருந்த 4 தனியார் விண்வெளி வீரர்களும் படகு மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இதுதொடர்பான காட்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News