உலகம்

மாயமான இளம் காதல் ஜோடி அழுகிய நிலையில் பிணமாக மீட்பு.... கொலையா?

Published On 2023-12-28 04:41 GMT   |   Update On 2023-12-28 04:41 GMT
  • சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார்.
  • காருக்குள் உடல் அழுகியநிலையில் இரண்டு சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோ நகரை சேர்ந்தவர் சவானா நிக்கோல் சோடோ (வயது 18). அதே பகுதியை சேர்ந்த இசைக்கலைஞரான மேத்யூ குரேரா (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிவீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது தனது தாயுடன் சவானா போனில் பேசி வந்துள்ளார்.

இதனிடையே சவானா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான சவானாவுக்கு இந்த மாத இறுதியில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் தேதி குறித்திருந்தனர்.

இந்தநிலையில் சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார். அதன்பின்பு இருவரும் வீடு திரும்பவில்லை.

பதறிபோன அவர்களுடைய பெற்றோர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம் காதல்ஜோடியை வலை வீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சாலையில் கார் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த கார், மாயமான குரேரா பெயரில் பதிவாகி இருந்தது தெரிந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த காரை சோதித்தனர். அப்போது காருக்குள் உடல் அழுகியநிலையில் இரண்டு சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் சவானா மற்றும் அவருடைய காதலன் குரேரா என தெரிந்தது. உடல்கள் அழுகியநிலையில் இருந்ததால் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பதை போலீசாரால் உறுதியாக கூற முடியவில்லை.

உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாயமான இளம் காதல்ஜோடி இறந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News