எல்லையில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ராணுவங்கள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை
- மோதலுக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர்.
- ஆப்கானிஸ்தான் படைகள் மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ராணுவங்கள் இடையே எல்லையில் சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து கத்தார் மத்தியஸ்த்தால் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. அதன் பிறகு நடந்த அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தநிலையில் நள்ளிரவில் எல்லையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
சாமன் எல்லை பகுதியில் இருதரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்டு மாறி மாறி துப்பாக்கியால் சுட்டனர். அதேபோல் சாமன்- காந்தஹார் நெடுஞ்சாலையில் சண்டை நடந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோதலில் வீரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே மோதலுக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர். பதானி பகுதியில் ஆப்கானிஸ்தான் படைகள் மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதற்கு பாகிஸ்தான் படைகள் பதிலடி கொடுத்ததாக தெரிவித்துள்ளது.
அதேபோல் ஆப்கானிஸ்தான் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபி ஹுல்லா முஜாஹித் கூறும் போது,"காந்தஹாரின் ஸ்பின் போல்டாக் மாவட் டத்தில் புதிய தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி உள்ளது. இதற்கு எங்கள் படைகள் பதிலடி கொடுத்தன.ஸ்பின் போல்டாக் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் பொது மக்களை குறிவைத்து பாகிஸ்தான் செயல்படுகிறது" என்றார்.
மோதல் காரணமாக இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது.