உலகம்

திடீர் மழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: 19 பேர் உயிரிழப்பு - 7 பேரைக் காணவில்லை

Published On 2024-03-10 11:30 GMT   |   Update On 2024-03-10 11:30 GMT
  • மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன
  • 80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இந்தோனேசியாவை சேர்ந்த தீவு பிரதேசம், சுமத்ரா (Sumatra island).

மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வந்த கடும் மழையால், திடீர் வெள்ளமும், அதை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது.

இதில் தற்போது வரை குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேரை காணவில்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (National Disaster Management Agency) தெரிவித்துள்ளது.

இந்த சரிவினால் மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. இவற்றால் நதிக்கரையோர கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோடோ XI டருசான் (Koto XI Tarusan) பகுதியில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.


80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 14 வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன.

20 ஆயிரம் பேர்களின் வீடுகள் மேற்கூரை வரை முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மின்சாரத் தடை, சாலைகளில் ஓடும் வெள்ள நீர், குப்பைகள் போன்றவற்றால் மீட்பு குழுவினர் கடும் சிரமத்திற்கிடையே சிக்கியுள்ள மக்களை மீட்க முயன்று வருகின்றனர்.

பெருமளவு மலைப்பிரதேசங்களை கொண்ட இந்தோனேசியாவில் வெள்ள அபாய பகுதிகள் ஏராளமாக உள்ளன.

அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் மழையால் ஏற்படும் வெள்ளம் போன்றவற்றால் லட்சக்கணக்கான மக்கள் துன்பப்படுவது அங்கு தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 2023 டிசம்பர் மாதம் திடீர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், டோபா எனும் ஏரிக்கருகே ஒரு ஓட்டல் முற்றிலும் சேதமானது.

Tags:    

Similar News