உலகம்

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர்கள் சீனா திரும்புவதற்கான விசா தடை நீக்கம்

Published On 2022-06-15 11:27 IST   |   Update On 2022-06-15 11:27:00 IST
  • இந்தியாவில் உள்ள சீனா தூதரகம் தனது விசா கொள்கையை புதுப்பித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
  • சீனாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

பெய்ஜிங்:

உலகம் முழுவதும் கடந்த 2020- ஆம் ஆண்டு கொரோனா ஆட்டி படைத்தது. இதனால் சீனாவில் படித்து வந்த இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தாயகம் திரும்பினார்கள்.

ஆனால் அதன் பிறகு அவர்கள் சீனா திரும்பி வர அந்நாட்டு அரசு விசா வழங்கவில்லை. இதனால் இந்தியர்கள் கடந்த 2 ஆண்டுகளாக சீனா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள சீனா தூதரகம் தனது விசா கொள்கையை புதுப்பித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதன்படி சீனாவில் வேலைபார்த்து வந்த இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீண்டும் அந்நாட்டுக்கு திரும்புவதற்காக விசா விண்ணப்பங்களை வழங்க சீனா முடிவு செய்துள்ளது.

சீனாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கொரோனாவுக்கு முன்பு சீனாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மருத்துவம் உள்ளிட்ட உயர்படிப்புகள் படித்து வந்தனர்.

தற்போது இதில் 12 ஆயிரம் பேர் சீனா திரும்பி மீண்டும் படிப்பை தொடர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

சீனா திரும்ப விரும்பும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு இந்திய தூதரகத்திடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்தியர்களுக்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்ட போதிலும் சென்ற 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்தியா- சீனா இடையேயான விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News