உலகம்

அஜர்பைஜனில் எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து- 20 பேர் உயிரிழப்பு

Published On 2023-09-26 13:59 IST   |   Update On 2023-09-26 13:59:00 IST
  • 13 பேர் சம்பவ இடத்திலும், ஏழு பேர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்துள்ளனர்.
  • 290க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அஜர்பைஜனில் உள்ள ஸ்டெபனகெர்ட் பகுதி வெளியே எரிவாயு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று பிற்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். இதில், சம்பவ இடத்தில் இருந்து 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், 290க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிராந்தியத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மூன்று தசாப்த கால பிரிவினைவாத ஆட்சிக்குப் பின்னர் அஜர்பைஜானின் பிராந்தியத்தை முழுமையாக மீட்பதற்காக கடந்த வாரம் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பிறகு, நாகோர்னோ-கராபாக்கின் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் ஆர்மீனியாவிற்கு இப்பகுதியை விட்டு வெளியேறினர்.

அப்போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News