உலகம்

ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்.. ரஷியாவில் தவித்த பயணிகள் மாற்று விமானத்தில் புறப்பட்டனர்

Published On 2023-06-08 02:39 GMT   |   Update On 2023-06-08 02:39 GMT
  • விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சான்பிரான்சிஸ்கோ விமான நிலைய குழுவினர், பயணிகளுக்கு உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர்

புதுடெல்லி:

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், என்ஜின் கோளாறு காரணமாக ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர்.

விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானத்தை ரஷியாவுக்கு அனுப்பி வைத்தது.

அந்த விமானம் மகாதன் விமான நிலையத்தை அடைந்த நிலையில், இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை ஏர் இந்தியா தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளது.

சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள குழுவினர், பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளனர் என்றும், பயணிகளின் மருத்துவ உதவி, தரைவழிப் போக்குவரத்து மற்றும் தொடர் பயணங்களுக்கான உதவிகளை செய்வார்கள் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News