உலகம்

சிறை

பாகிஸ்தான் சிறையில் 682 இந்தியர்கள் - இந்தியாவிடம் பட்டியல் ஒப்படைப்பு

Published On 2022-07-02 18:04 GMT   |   Update On 2022-07-02 18:04 GMT
  • பாகிஸ்தான் சிறையில் வாடும் 682 இந்தியர்கள் பற்றிய பட்டியலை அந்நாடு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
  • இந்திய சிறைகளில் வாடும் 461 பாகிஸ்தானியர் பற்றிய பட்டியலை இந்திய அரசு பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.

இஸ்லாமாபாத்:

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பிலும் தூதரக ரீதியில் கைதிகளை பரஸ்பரம் அணுகுவதற்கு வழிசெய்யும் ஒப்பந்தம் 2008-ம் ஆண்டு மே மாதம் 21–ம் தேதி கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் பரஸ்பரம் தத்தமது சிறைகளில் வாடும் எதிர்நாட்டு கைதிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1–ம் தேதியும், ஜூலை 1–ம் தேதியும் பரிமாறிக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சிறையில் வாடுகிற 633 மீனவர்கள், 49 சிவிலியன்கள் என 682 இந்தியர்கள் பற்றிய பட்டியலை அந்த நாட்டின் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது.

இதேபோல், இந்திய சிறைகளில் வாடும் 116 மீனவர்கள், 345 சிவிலியன்கள் என 461 பாகிஸ்தானியர் பற்றிய பட்டியலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய அரசும் வழங்கியது. மேலும், பாகிஸ்தான் சிறையில் உள்ள 539 பேரின் இந்திய குடியுரிமை உறுதிப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News