உலகம்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

உக்ரைனுக்கு சிறப்பு ராணுவ உபகரணங்களை அனுப்புகிறது கனடா- ஜஸ்டின் ட்ரூடோ தகவல்

Published On 2022-03-09 17:15 IST   |   Update On 2022-03-09 17:19:00 IST
ரஷியா மீதான பொருளாதார தடைகள் மற்றும் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து செலன்ஸ்கியிடம் ஆலோசித்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி உள்ளார்.
ஒட்டாவா:

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள், உக்ரைனின் சில நகரங்களை கைப்பற்றிவிட்டன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பிடிக்க ரஷிய ராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை பாதுகாக்க உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷமாக ரஷிய படைகளை எதிர்கொண்டு வருகின்றனர். 

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தவண்ணம் உள்ளன. ரஷியாவால் ஒருபோதும் உக்ரைனை வீழ்த்த முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார். உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக்காக துணிச்சலாக போராடுகிறார்கள், அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் பைடன்  கூறி உள்ளார்.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் டூரூடோ, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ரஷியா மீதான பொருளாதார தடைகள் மற்றும் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து செலன்ஸ்கியிடம் ஆலோசித்ததாக ஜஸ்டின் ட்ரூடோ கூறி உள்ளார்.

உக்ரைனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இராணுவ உபகரணங்களின் மற்றொரு தொகுப்பு அனுப்பப்படும் என்று ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார். மேலும் கனடாவின் பாராளுமன்றத்தில் உரையாற்ற ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

Similar News