உலகம்
2 ஆண்டுகளுக்கு பின் உறவினர்களை சந்தித்தவர்கள் நெகிழ்ச்சி

ஆஸ்திரேலியாவில் சர்வதேச பயணிகளுக்கு அனுமதி

Published On 2022-02-22 02:00 GMT   |   Update On 2022-02-22 02:00 GMT
2 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்தித்தவர்கள், ஆனந்த கண்ணீர் சிந்தியப்படி ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய நெகிழ்ச்சி தருணங்களும் விமான நிலையங்களில் அரங்கேறின.
கான்பெர்ரா :

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது எல்லைகள் அனைத்தையும் மூடிய ஆஸ்திரேலியா, சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று குறைய தொடங்கியதும் ஆஸ்திரேலிய அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அந்த வகையில் திறன்படைத்த புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

எனினும், சுற்றுலா உள்ளிட்ட பிற தேவைகளுக்காக வரும் சர்வதேச பயணிகளுக்கான தடை தொடர்ந்தது. இதனால் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்திக்க முடியாமல் பலரும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர் பிப்ரவரி 21-ந்தேதி முதல் ஆஸ்திரேலியா வரலாம் என்று பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்த மாத தொடக்கத்தல் அறிவித்தார்.

அதன்படி, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று ஆஸ்திரேலியா சென்றனர். சிட்னி விமான நிலையத்தில் வந்திறங்கிய சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் இனிப்புகள் வழங்கியும், கோலா கரடி பொம்மைகளை பரிசளித்தும் வரவேற்றனர்.

அதோடு, 2 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்தித்தவர்கள், ஆனந்த கண்ணீர் சிந்தியப்படி ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய நெகிழ்ச்சி தருணங்களும் விமான நிலையங்களில் அரங்கேறின.
Tags:    

Similar News