உலகம்
ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் பலி
- தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
- அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் நடந்த டிரோன் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
கீவ்:
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் ஆண்டுக்கணக்கில் நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ரஷியாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் உக்ரைன் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
டிரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ரஷிய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.