செய்திகள்

இலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை

Published On 2019-04-25 07:36 GMT   |   Update On 2019-04-25 07:36 GMT
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை வான் பகுதியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
கொழும்பு:

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளுடன் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, தலைநகர் கொழும்பு மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் ராணுவம் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலங்கை வான் பகுதியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் தொடர்பாக 75க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் தேசிய  தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
Tags:    

Similar News