செய்திகள்

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்: சிறிசேனா தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

Published On 2019-04-24 15:11 GMT   |   Update On 2019-04-24 15:31 GMT
இலங்கையில் நாளை காலை 10 மணிக்கு அதிபர் சிறிசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #SrilankanBlasts #Sirisena
கொழும்பு:

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை 8.45 மணியளவில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் 2 தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. 

இந்த நிலையில், இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையில் நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. குண்டு வெடிப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் தலைவர்களுடன் சிறிசேன ஆலோசனை நடத்த உள்ளார்.  அதனை தொடர்ந்து  இலங்கையில் மாலை 4 மணிக்கு அதிபர் சிறிசேன தலைமையில் சர்வ சமய கூட்டம் நடைபெறவுள்ளது. 

இலங்கையில் இன்றிரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவங்களால் நிலவும் பதற்றத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #SrilankanBlasts #Sirisena
Tags:    

Similar News