செய்திகள்

சீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து - 10 பேர் பலி

Published On 2019-04-16 18:45 GMT   |   Update On 2019-04-16 18:45 GMT
சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #China #Pharmaceutical #FireAccident
பீஜிங்:

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷினான்ஜி நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. ஆலையின் கீழ் தளத்தில் உள்ள எரிவாயு குழாய்களை சீரமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு திடீரென தீப்பிடித்தது.

இதனால் அங்கு கரும் புகை மண்டலம் எழுந்து, ஆலை முழுவதையும் சூழ்ந்தது. தீவிபத்தை தொடர்ந்து, ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்தபடி வெளியே ஓடினர். எனினும் தீயில் சிக்கியும், புகையால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டும் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடந்த மாதம் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 78 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.   #China #Pharmaceutical #FireAccident 
Tags:    

Similar News