செய்திகள்

சீனா ரசாயன ஆலையில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

Published On 2019-03-23 02:12 GMT   |   Update On 2019-03-23 03:33 GMT
சீனாவில் ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.#ChinaChemicalPlantBlast
பீஜிங் :

சீனாவின் ஜியாங்சு மாகாணம் யான்செங் நகரில் ரசாயன ஆலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதனால் ஏற்பட்ட தீ, ஆலை முழுவதையும் சூழ்ந்துகொண்டது. ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து, 150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சுமார் 1,000 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் பலர் தீயில் கருகி பலியாகினர். இந்த கோரவிபத்தில் 6 பேர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், நேற்று காலை ஆலைக்குள் இருந்து மேலும் 41 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது. 

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள். லேசான காயம் அடைந்தவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 17 பேர் உயிரிழந்தனர். இதனால் இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. மேலும் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. #ChinaChemicalPlantBlast 
Tags:    

Similar News