செய்திகள்

மசூத் அசாரை கைது செய்ய மாட்டோம் - பாகிஸ்தான் அரசு திட்டவட்டம்

Published On 2019-03-15 09:20 GMT   |   Update On 2019-03-15 09:20 GMT
புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இந்திய அரசிடம் இருந்து வராத நிலையில் மசூத் அசாரை கைது செய்ய மாட்டோம் என்னும் நிலைப்பாட்டில் பாகிஸ்தான் அரசு உள்ளதாக தெரியவந்துள்ளது. #Pakistangovernment #MasoodAzhar #Pulwamaattack
இஸ்லாமாபாத்:

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.



இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கான ஆதாரங்களை இந்திய அரசு கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் மசூத் அசார் உள்பட 22 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

ஆனால், இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவர்கள் அனுப்பிய தகவலில் இவர்களுக்கு எல்லாம் தொடர்பு இருப்பதாக ‘கருதப்படுவதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வலிமையான ஆதாரங்கள் இல்லாததால் நாங்கள் மசூத் அசாரை கைது செய்யவோ, தடுப்பு காவலில் அடைத்து வைப்பதற்கோ எவ்வித முகாந்திரமும் இல்லை என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தேசிய செயல் திட்டத்தின் அடிப்படையில் மசூத் அசாரின் சகோதரர், மகன் உள்பட சிலரை கைது செய்து ஒருமாத காலம் தடுப்பு காவலில் அடைத்து வைத்திருக்கிறோம்.

ஆனால், மசூத் அசாரின் பெயர் உள்நாட்டு பயங்கரவாதிகள் பட்டியலில் இல்லை. பாகிஸ்தானில் மசூத் அசார் எவ்வித வன்முறை தாக்குதலும் நடத்தியதில்லை. பிறகு, நாங்கள் ஏன் அவரை கைது செய்ய வேண்டும்? எனவும் அந்த உயரதிகாரி உள்நாட்டு ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

இதற்கிடையில், தடைசெய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரின் பெயரை சேர்க்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் ஐ.நா.பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சீனா முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றதால் அந்த இயக்கத்துக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கப்போவதாக பிரான்ஸ் அரசு இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Pakistangovernment #MasoodAzhar #Pulwamaattack
Tags:    

Similar News