செய்திகள்

தேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா

Published On 2018-12-21 08:31 IST   |   Update On 2018-12-21 08:31:00 IST
தேர்தல் தலையீடு குற்றச்சாட்டு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசு, ரஷ்யா தொடர்புடைய மேலும் 22 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது. #USSanctions #RussianSpies
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, வாக்கெடுப்பில் தலையிட்டு தேர்தல் முடிவின் மீது தாக்கம் செலுத்த முயன்றதாக ரஷ்யாவை அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் குற்றஞ்சாட்டின. அரசியல் கட்சிகள், தலைவர்களின் இ-மெயில், சர்வர்களில் ஊடுருவி (சைபர் ஹேக்கிங்) அத்துமீறலில் ஈடுபட்டதாக ரஷ்ய உளவு அமைப்புகள் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இந்த  குற்றச்சாட்டை ரஷ்யா ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகிறது. எனினும், தொடர்ந்து சைபர் ஹேக்கிங் குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்தது. அத்துடன் அமெரிக்காவில் உள்ள ரஷ்ய உளவு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக புதிய தடைகளை பிறப்பித்து வருகிறது.

அவ்வகையில், 18 ரஷ்ய தனிநபர்கள் மற்றும் 4 ரஷ்ய நிறுவனங்கள் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது. தடைவிதிக்கப்பட்ட 18 நபர்களில் 15 பேர், ரஷ்யாவின் பிரதான புலனாய்வு அமைப்பின் (ஜிஆர்யு) உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இதுவரை ரஷ்யா தொடர்புடைய 272 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #USSanctions #RussianSpies
Tags:    

Similar News