செய்திகள்

பாராளுமன்றத்தை கலைத்த இலங்கை அதிபரின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Published On 2018-11-13 13:19 GMT   |   Update On 2018-11-13 13:19 GMT
இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் இன்று தடை விதித்துள்ளது. #SriLankaSupremeCourt #SriLankaparliamentsacking
கொழும்பு:

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டின் பெரும்பான்மை பலம்மிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் நேற்று இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.

அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் இந்த கட்சிகள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தன.

இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நலின் பெரேரா தலைமையிலான அமர்வின் இன்று விசாரணைக்கு வந்தது. கொழும்பு நகரில் உள்ள சுப்ரீம் கோர்ட்டை சுற்றிலும் ஏராளமான போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். கோர்ட்டின் தீர்ப்பை அறிய ஏராளமான பத்திரிகையாளர்களும் குவிந்தனர்.



இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பாராளுமன்றம் கலைத்து உத்தரவிட்ட மைத்ரிபாலா சிறிசேனாவின் நடவடிக்கை செல்லாது எனவும்,  பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக அரசு பிறப்பித்த அறிவிக்கையை ரத்து செய்தும், ஜனவரி 5-ந் தேதி பாரளுமன்ற தேர்தல் நடத்த தடை விதித்தும் தீர்ப்பளித்தனர். #SriLankaSupremeCourt #SriLankaparliamentsacking
Tags:    

Similar News