செய்திகள்

ரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Published On 2018-10-21 04:31 GMT   |   Update On 2018-10-21 04:31 GMT
ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது. #S400missiles
இஸ்லாமாபாத்:

நாட்டின் வான்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்குகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கும் பாகிஸ்தான் தற்போது வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறது. ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்றும், மீண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 1998-ல் இரு நாடுகளும் அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து, இந்த பிராந்தியத்தில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை பாகிஸ்தான் வைத்ததுடன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பை வாங்கும் இந்தியாவின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இந்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டதால் எந்தவகையான ஏவுகணைகளையும் செயலிழக்க செய்யும் வலிமையை அடைவதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது’ என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும், இந்த பிராந்தியத்தை சீர்குலைக்கும் எந்தவகையான ஆயுதங்களையும் எதிர்க்கும் வலிமை தங்களுக்கு இருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  #S400missiles
Tags:    

Similar News