செய்திகள்

சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் - இண்டர்போல் தகவல்

Published On 2018-10-07 20:28 GMT   |   Update On 2018-10-07 20:28 GMT
சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் என இண்டர்போல் தெரிவித்துள்ளது. #Interpol #MengHongwei
லியான்:

பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சீன தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். 
 
கடந்த செப்டம்பர் முதல் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெங் ஹாங்வே செப்டம்பர் 29-ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது முதல் அவரை காணவில்லை என தகவல் வெளியானது. இண்டர்போலின் சீன தலைவர் மெங் ஹாங்வேவை விசாரணைக்காக சீன போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக ஹாங்காங்கின் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதற்கிடையே விதிகளை மீறியது தொடர்பாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் என இண்டர்போல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், மெங் ஹாங்வே அனுப்பி வைத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவரது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இண்டர்போலின் சீன துணை தலைவராக உள்ள கிம் ஜாங் யங் பொறுப்பு தலைவராக நியமனம் செய்யப்படுகிறார் என தெரிவித்துள்ளது. #Interpol #MengHongwei
Tags:    

Similar News