செய்திகள்

சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் உத்தரவு - 60 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்

Published On 2018-10-06 18:48 GMT   |   Update On 2018-10-06 18:48 GMT
பாகிஸ்தானில் இயங்கிவரும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், தங்களுடைய செயல்பாடுகளை முடித்துக்கொண்டு, 60 நாட்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. #Pakistan #NGO
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுக்கு இந்நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

ஆனால் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் என கூறிக்கொண்டு அந்த அமைப்புகள் உளவு வேலைகளில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டுகிறது.

ஒசாமா பின்லேடனை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. நிறுவனம் ஒரு போலியான தடுப்பூசி திட்டத்தின் பேரில் நாட்டுக்குள் நுழைந்து செயல்பட்டு வந்தது கடந்த 2011-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிறகு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மீதான பாகிஸ்தான் உளவுத்துறையின் சந்தேகங்கள் அதிகரித்தது. அதனை தொடர்ந்து, சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இயங்கிவரும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், தங்களுடைய செயல்பாடுகளை முடித்துக்கொண்டு, 60 நாட்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து அனைத்து சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.  #Pakistan #NGO
Tags:    

Similar News