செய்திகள்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீனா மீது டிரம்ப் பரபரப்பு புகார்

Published On 2018-09-28 02:06 IST   |   Update On 2018-09-28 02:06:00 IST
அமெரிக்க தேர்தலில் தலையிட சீனா முயற்சி செய்து வருவதாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் டிரம்ப் புகார் அளித்துள்ளார். #DonaldTrump #China #UNSecurityCouncil
நியூயார்க்:

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லிணக்கம் இல்லை. இரு நாடுகள் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் தொடர்ந்து கூடுதல் வரி விதித்து வருகின்றன. தைவானுக்கு அமெரிக்கா போர் விமான பாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது சீனாவுக்கு அமெரிக்கா மீது ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.



இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பேரழிவு ஏற்படுத்துகிற ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நவம்பர் 6-ந் தேதி நடக்க உள்ள எங்கள் தேர்தலில் தலையிடுவதற்கு சீனா முயற்சி செய்து வருகிறது. இது எனது நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகும்” என்று குறிப்பிட்டார். இது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையின் 33 இடங்களுக்கும், 39 கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. #DonaldTrump #China #UNSecurityCouncil
Tags:    

Similar News