செய்திகள்

இத்தாலியின் ஜெனோவா நகரில் பாலம் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

Published On 2018-08-19 10:22 GMT   |   Update On 2018-08-19 10:22 GMT
இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பாலத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. #GenoaBridgeCollapse
ரோம்:

இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையில் கான்கிரீட் தூண்களை அமைத்து அவற்றின் மீது உருவாக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாகதான் இங்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இடையில் சில வாய்க்கால் மற்றும் கால்வாய் பாலங்களும் உள்ளன.

இந்நிலையில், ஜெனோவா நகரின் மேற்கில் பிரபல தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள A10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்னும் பாலத்தின் ஒருபகுதி கடந்த 13-ம் தேதி திடீரென்று இடிந்து விழுந்தது.


சுமார் 200 மீட்டர் நீளத்திலான பகுதி சுமார் 100 அடி ஆழத்தில் நொறுங்கி விழுந்ததால் அப்போது அவ்வழியாக சென்ற பல கார்களும் லாரிகளும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டன. அவற்றை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. பின்னர், வாகன இடிபாடுகளுக்கு இடையில் இருந்து அடுத்தடுத்து பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டன. நேற்றிரவுடன் முடிவடைந்த மீட்பு பணிகளின்போது கார்களுக்கு இடையில் சிக்கி இருந்த 3 பிரேதங்கள் கிடைத்தன.


இதைதொடர்ந்து, இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #GenoaBridgeCollapse
Tags:    

Similar News