செய்திகள்

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - 10 பேர் பலி

Published On 2018-07-29 05:21 IST   |   Update On 2018-07-29 10:29:00 IST
இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் தீவின் அருகே இன்று அதிகாலையில் ரிக்டர் 6.4 அளவில் ஏற்பட்ட திடீரென நிலநடுக்கத்தால் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #LombokEarthQuake
ஜகர்தா:

இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை அங்கு பூகம்பம் ஏற்பட்டது. சுமத்ராவை ஒட்டியுள்ள லம்பாக் என்ற தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. . கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் அதன் மையப்புள்ளி அமைந்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.



இந்த நிலநடுக்கத்தால் அந்த தீவில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 10 பேர் வரை பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், மீட்பு நடவடிக்கைகள் முடிந்த பின்னரே பலி எண்ணிக்கை குறித்து துல்லியமாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 
Tags:    

Similar News