செய்திகள்

உகாண்டா - கம்பாலாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Published On 2018-07-24 19:18 GMT   |   Update On 2018-07-24 19:18 GMT
உகாண்டா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். #ModiinUganda
கம்பாலா:

அரசுமுறை பயணமாக நேற்று உகாண்டா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்ட்டெபே நகர விமான நிலையத்தில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் முப்படை அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இருநாடுகளின் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக மோடி - யோவேரி முசெவேனி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா - உகாண்டா இடையில் 4 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. ராணுவ ஒத்துழைப்பு, விசா நீட்டிப்பு, கலாசார பரிவர்த்தனை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.

மேலும், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவிகள் வழங்கப்படும் என்றார்.

இந்நிலையில், தலைநகர் கம்பாலாவில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.



அதன்பின்னர், கம்பாலாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு இந்தியாவின் அலகாபாத் நகரில் நடைபெறவுள்ள கும்பமேளா நிகழ்ச்சி மற்றும் வாரணாசியில் நடைபெறும் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அந்த விழாவுக்கு உங்களை அழைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

உகாண்டாவில் அடுத்த தடவை நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடிக்கு எண்ட்டெபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #ModiinUganda
Tags:    

Similar News