செய்திகள்

பாட்டி, காதலியை சுட்டுவிட்டு போலீஸ் துரத்தியதால் மக்களை பிணையக் கைதியாக பிடித்த நபர்

Published On 2018-07-22 02:45 GMT   |   Update On 2018-07-22 02:45 GMT
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாட்டி, காதலியை சுட்டுவிட்டு போலீசார் துரத்தியதால் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து பொதுமக்களை பிணையக்கைதியாக பிடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். #LosAngeles
லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள சில்வர் லேக் பகுதியில் இருக்கும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் துப்பாக்கியுடன் மர்மநபர் உள்ளே புகுந்தார். இதனை அடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் பலரை அவர் பிணையக்கைதியாக பிடித்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை அடுத்து, உள்ளூர் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் அப்பகுதியை முற்றுகையிட்டு பொதுமக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்களுக்கு பிறகு அந்த மர்மநபர் பிடிபட்டுள்ளதாகவும், அவன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் பலியானதாகவும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தெரிவித்துள்ளார்.

பகல் 2 மணியளவில் நகரின் தெற்கு பகுதியில் தனது பாட்டி மற்றும் காதலியை சுட்டுவிட்டு தப்பிச் செல்லும் போது போலீசார் அந்த நபரை துரத்தியுள்ளனர். அந்த நபரின் கார் சூப்பர் மார்கெட் அருகே உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதால், காரிலிருந்து வெளியேறிய நபர் சூப்பர் மார்க்கெட் உள்ளே புகுந்துள்ளார்.

பின்னர், கதவுகளை மூடிவிட்டு அங்கிருந்தவர்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News