செய்திகள்
விதிமுறைகளை மீறி சிறையில் சந்தித்துக்கொண்ட நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ்
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் மற்றும் மரியம் இருவரும் சிறை விதிமுறைகளை மீறி சந்தித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்:
லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள நவாஸ் ஷரிப்பை சந்தித்து பேசிய பிறகு பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் மூத்த தலைவர் பர்வேஸ் ரஷித் அடிடாலா சிறை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு சிறை விதிமுறைகளுக்கு மாறாக முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர்.
அவர்களின் இலக்கை அடைவதற்கும், வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரிக்கை வைப்பதற்கும் சிறை தண்டனை அவர்களுக்கு ஒரு தடையாக இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.