செய்திகள்

பில்லி சூனியம் வைத்து பெண்களை பாலியல் தொழிலுக்கு கடத்திய பிரிட்டன் நர்சுக்கு 14 ஆண்டு சிறை

Published On 2018-07-06 03:51 GMT   |   Update On 2018-07-06 03:51 GMT
பில்லி சூனியம் வைத்து பெண்களை பாலியல் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு கடத்திய வழக்கில் பிரிட்டன் நர்சுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #VoodooMagic #TraffickingWomen
லண்டன்:

லண்டனைச் சேர்ந்த ஜோசப்பின் இயாமு என்ற நர்ஸ் (வயது 53), பில்லி சூனியம் செய்து நைஜிரியாவைச் சேர்ந்த பெண்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு கடத்தியதாக கைது செய்யப்பட்டார். விசாரணையில், பிரிட்டன் குடியுரிமை பெற்ற இயாமு தேசிய சுகாதார மையத்தில் செவிலியாக பணி புரிந்து வந்ததும், இவருக்கு பில்லி சூனியம் போன்ற மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு இருப்பதும் தெரியவந்தது.

நைஜீரியாவைச் சேர்ந்த 5 பெண்களை தன் வலையில் விழ வைத்த இயாமு, மந்திரவாதி ஒருவர் மூலம் நடத்தப்படும் மிகவும் மாந்திரீக சடங்கில் (ஜூஜூ) பங்கேற்க செய்துள்ளார். அப்போது பூஜைகள் செய்து கோழியின் இதயத்தை சாப்பிட வைப்பது, புழுக்களுடன் கூடிய இரத்தத்தை குடிக்கச் செய்வது, பிளேடால் தங்கள் உடல்களில் கீறுவது என வக்கிரமான சடங்குகளை கட்டாயப்படுத்தி செய்ய வைத்துள்ளார். அதன்பின்னர், அவர்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் நாட்டுக்கு கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் ஜெர்மனி சென்று தொழில் செய்யும்போது எங்கும் தப்பி ஓடிவிடக்கூடாது, போலீசிடம் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி வாக்குறுதி பெற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இயாமு மீது பர்மிங்காம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 10 பெண் நீதிபதிகள் உள்ளிட்ட 11 நீதிபதிகள் கொண்ட குழு இவ்வழக்கை விசாரித்தது. சுமார் 10 வார காரலமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், இயாமு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது, பில்லி சூனியம் வைத்துவிடுவதாக மிரட்டி பெண்களை பாலியல் தொழிலுக்காக நாடு கடத்திய இயாமுவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. #VoodooMagic #TraffickingWomen
Tags:    

Similar News