செய்திகள்
ரூ.1.50 கோடி வரை அபராதம் - தமிழக மீனவர்கள் மீது புதிய சட்டத்தின் கீழ் இலங்கை வழக்கு?
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை, புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு:
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச்சென்றனர்.
இந்தநிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும், கொழும்பு நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.50 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை மீனவர்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதனை கட்ட தவறினால் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும் புதிய சட்டத்தில் இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.