செய்திகள்

தாய்லாந்து குகைக்குள் 9 நாளாக சிக்கியுள்ள 12 மாணவர்கள் - மீட்கும் பணியில் ஆயிரம் பேர்

Published On 2018-07-02 09:29 GMT   |   Update On 2018-07-02 09:52 GMT
தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள மலைக்குகைக்குள் கடந்த 9 நாட்களாக சிக்கியுள்ள 12 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரை மீட்கும் பணியில் ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். #Thailand
பாங்காக்:

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லாவுங் நாங் நான் மலைப்பகுதியில் கடந்த மாதம் 23-ம் தேதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, மலைப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக 13 பேரும் அங்குள்ள குகை ஒன்றில் ஒதுங்கியுள்ளனர்.

அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து திரும்பவில்லை. 9 நாட்களாகியும் அவர்கள் அந்த குகையில் சிக்கியுள்ளனர். வெள்ளம் காரணமாக அவர்கள் குகைக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 13 பேரின் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து ராணுவம் ஈடுபட்டு வருகிறது.



குகையின் 25-க்கும் மேற்பட்ட பகுதியில் துளையிடப்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டு வருகிறது. குகையில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 1000 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து குகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

மாணவர்கள் சிக்கியுள்ள பகுதியை நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ள மீட்புக்குழுவினர், மழை காரணமாக குகைக்குள் தண்ணீர் அதிகமாக வருகிறது. இதனால், மீட்புப்பணி தாமதமாகிறது என கூறியுள்ளனர். 9 நாட்களாக உணவின்றி அவர்கள் உள்ளே சிக்கியுள்ளதால், 13 பேரின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.
Tags:    

Similar News