செய்திகள்
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை சீனா செல்கிறார்
சீனாவில் நாளை தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சீனாவுக்கு செல்கிறார். #SCOSummit #PMModi #ChinaVisit
புதுடெல்லி:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு சீனாவின் குயிங்டாவோ நகரில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
அதற்காக பிரதமர் மோடி நாளை இரண்டு நாள் பயணமாக சீனாவுக்கு செல்கிறார். பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த பிராந்திய மற்றும் உலகளாவிய நடவடிக்கை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தியா, கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினர் ஆனது.
நாளை சீனா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளார். சமீபத்தில் சீனாவின் ஊஹன் நகருக்கு சென்ற மோடி சீன அதிபருடன் பேச்சிவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய சந்திப்பின் போது, முந்தைய சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது மற்ற நாட்டு தலைவர்களுடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. #SCOSummit #PMModi #ChinaVisit