செய்திகள்

ஏமனில் 14 பேரை பலி வாங்கிய தற்கொலைப்படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.

Published On 2018-02-25 00:34 GMT   |   Update On 2018-02-25 00:34 GMT
ஏமனில் ராணுவ தலைமையகம் மீது நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பலியான சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
ஏடன்:

ஏமனில் ராணுவ தலைமையகம் மீது நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பலியான சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஏமன் நாட்டில் உள்ள துறைமுக நகரமான ஏடனில் ராணுவ முகாம் அமைந்துள்ளது. நேற்று காலை அங்குள்ள சோதனை சாவடியின் அருகில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தீவிரவாதிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த காரை வெடித்துச் சிதற வைத்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என 14 பேர் பலியாகினர் எனவும், 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏமனில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களை மீட்பதற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. அரபு நாடுகளின் கூட்டுப்படை உதவியுடன் நடத்தப்படும் இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இத்தகவலை ஐ.எஸ். ஆதரவு செய்தி நிறுவனமான அமாக் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News