செய்திகள்

ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்! - ஏர் ஏசியா புது சலுகை

Published On 2017-11-13 08:49 GMT   |   Update On 2017-11-13 08:50 GMT
மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் விமான நிறுவனமான ஏர் ஏசியா, 99 ரூபாய் அடிப்படை கட்டணத்தில் பட்ஜெட் விமான பயண வாய்ப்பை சாமானியர்களுக்கு வழங்கியுள்ளது.
கோலாலம்பூர்:

மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, 99 ரூபாய் அடிப்படை கட்டணத்தில் சாமானியர்களும் விமான பயண ஆசையை நிறைவேற்றும் வண்ணம் புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘பிக் சேல் ஸ்கீம்’ என்ற இத்திட்டத்தில் குறைந்த பட்ச அடிப்படை கட்டணமாக ரூ.99 (வரிகள் இல்லாமல்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி வரை இருக்கும் நாட்களில் உங்களது பயண தேதியை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.



இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் உங்கள் பயணத்தை ஒரு முறை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி இம்மாதம் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, முன்பதிவுக்கு முந்துங்கள்.

99 ரூபாய் அடிப்படை கட்டணமான நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விமான நிலைய வரி மற்றும் ஜி.எஸ்.டி சேர்த்து உங்களது பயன கட்டணத்தில் வசூலிக்கப்படும். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஒரிசா மாநிலம் புபனேஷ்வருக்கு 466 ரூபாய் (எல்லா வரிகளும் சேர்த்து) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புபனேஷ்வரில் இருந்து கொல்கத்தாவுக்கு 507 ரூபாயும், ராஞ்சியிலிருந்து கொல்கத்தாவுக்கு 571 ரூபாயும், கொச்சியிலிருந்து பெங்களுரூவுக்கு 764 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நகரங்களுக்கான கட்டண விபரங்கள் ஏர் ஏசியா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் குறிப்பிட்ட சீட்டுகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் எனவும், முன்பதிவு செய்து விட்டால் எந்த காரணத்திற்காகவும் பயணதொகை திரும்ப அளிக்கப்பட மாட்டாது எனவும் விதிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News